கோவாவில் பரா கிராம பஞ்சாயத்து புகைப்படம் எடுக்க வரி விதித்த விவகாரம் தற்போது பெரிதாக வெடித்துள்ளது. அது சட்டத்துக்குப் புறம்பானது என்றும், மாநில சுற்றுலாவுக்குக் கெட்ட பெயர் என்றும் கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் கடுமையாகச் சாடியுள்ளார்.
சுற்றுலாவுக்குப் பெயர்போன இடம் கோவா. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவர். மேலும் கோவாவில் பரா கிராமம் பல சிறப்புகள் வாய்ந்தது. பல திரைப்பட படப்பிடிப்புகளும் இந்தக் கிராமத்தில் நடைபெறுவது வழக்கம். தற்போது இதற்கெல்லாம் செக் வைத்துள்ளது பரா கிராமம்.
மனிதன் - யானை பிரச்னை: தீர்வைத் தேடும் சூழலியலாளர்!
ஆம், அந்த கிராமத்தின் சாலைகளைப் புகைப்படமாகவோ, காணொலியாகவோ பதிவு செய்தால் புகைப்பட வரி எனக் குறிப்பிட்ட தொகையைக் கிராம பஞ்சாயத்து வசூல் செய்துவருகிறது. சமீபத்தில், அந்தக் கிராமத்தில் புகைப்படம் எடுத்த சுற்றுலாப் பயணிகளிடம் பரா கிராம பஞ்சாயத்து வரி வசூல் செய்யும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது.
அதன் பிறகே பரா கிராம பஞ்சாயத்து புகைப்படத்துக்கு வரி வசூல் செய்யும் தகவல் வெளியுலகுக்குத் தெரியவந்தது. தற்போது இந்த வரி விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இது குறித்து கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகர் அஜ்கோங்கர் கூறுகையில், “புகைப்படம் எடுக்கச் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை.
மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதிகளா? தலைமைச் செயலாளரின் பேச்சால் சர்ச்சை!
இது கோவாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கடுமையாகப் பாதிக்கும். அந்த கிராம பஞ்சாயத்து என்ன செய்தது என்பதை ஆய்வு செய்வேன். வரி என்ற பெயரில் கட்டணம் ஏதும் வசூல் செய்திருந்தால் அதனை உடனடியாக திரும்பப் பெறச் சொல்வேன்” என்று தெரிவித்தார்.