உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தை அடுத்துள்ள ஆனந்த் விஹார் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் (வயது 73 ) என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (மார்ச் 28) உயிரிழந்தார். கரோனா பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால் முதியவரின் இறுதிச்சடங்கில் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
இதனால், முதியவரின் இறுதிச் சடங்கை நடத்த அவரது குடும்பத்தினர் சிரமம் அடைந்தனர். இந்நிலையில், குடும்பத்தினரின் துயரத்தில் பங்கேற்கும் விதமாக அவர்களின் வீட்டருகே உள்ள இஸ்லாமியர்கள், முதியவரின் இறுதிச் சடங்குகளுக்கு உதவ முடிவு செய்தனர். ரவிசங்கரின் இறுதிச் சடங்குகளை அவரது குடும்பத்தினரது விருப்பப்படி இந்து மத சடங்குகளுடன் செய்து இறுதி ஊர்வலம் நடத்தி உடலை அடக்கம் செய்தனர்.
இது நடந்து முடிந்து இருநாள்கள் கழித்து அவரது குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்தபோது இந்த விவகாரம் வெளி உலகத்திற்கு தெரியவந்தது.
இது தொடர்பாக இஸ்லாமியர்களுள் ஒருவரான முகமது ஜுபைர் கூறுகையில், “ரவிசங்கர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர், இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால் சிரமத்திற்குள்ளாகி நின்ற அவரது குடும்பத்திற்கு உதவ முடிவு செய்தோம். எங்கள் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரும் கூடி அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்து, ஊர்வலமாக கொண்டுச் சென்று அடக்கம் செய்தோம். எங்களைப் பொறுத்தவரை மதம், மொழி, இனம் இவை எல்லாவற்றிற்கும் மேலானது, மனிதநேயம்” என கூறினார்.
இது தொடர்பாக உயிரிழந்த ரவிசங்கரின் மகன் பிரமோத் கூறியபோது, "முழுமையாக முடக்கப்பட்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் அண்டை வீடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் செய்து தந்தனர். இறுதிச் சடங்குகளுக்கு எங்களுக்கு உதவினார்கள். எல்லோரும் மிகவும் உறுதுணையாக இருந்து எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. இந்த நெருக்கடி நேரத்தில் எங்களுடன் நின்ற எனது இஸ்லாமிய நண்பர்களுக்கு நாங்கள் எப்போதும் கடன்பட்டிருப்போம்" என்றார்.
இதையும் படிங்க : சமூகநல அமைப்பினரோடு பிரதமர் மோடி கலந்துரையாடல்!