புதுச்சேரி வில்லியனூரில் விழுப்புரம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஜூலை 22ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் காவித் துண்டை அணிவித்துச் சென்றுள்ளார். அந்த விவகாரம் அதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதற்கிடையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதற்குக் கண்டனம் தெரிவித்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய, புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் வில்லியனூர் காவல் துறையினர் விசாரணையில், எம்ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்தது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுசிலா என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து காவலர்கள், "புதுச்சேரி முத்துப்பிள்ளைபாளையம் பகுதியைச் சேர்ந்த சுசிலா என்பவர் அவரது கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டார்.
அவரது கணவர் தீவிர எம்ஜிஆர் விசுவாசி என்பதால், அவர் உயிருடனிருந்தபோது சபரி மலைக்குச் செல்லும் போது பயன்படுத்திய காவித்துண்டை வில்லியனூர் எம்ஜிஆர் சிலைக்கு அணிவித்துள்ளார்" எனத் தெரிவித்தனர். மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்பதால், வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு: புதுச்சேரியில் பரபரப்பு!