கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 63 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், விசாரணையில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் நிறுவனத்திற்கு முன்னதாக அளிக்கப்பட வேண்டிய பணம் வழங்காததால் தேவையான நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கவில்லை என தெரிய வந்தது.
திடீர் திருப்பமாக, தன் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி குழந்தைகளின் பலியை தடுத்த மருத்துவர் கபீல் கான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஒன்பது மாத சிறைக்கு பிறகு கபீல் கானுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.
குழந்தைகள் உயிரிழப்பு குறித்து விசாரித்துவந்த விசாரணை ஆணையம் தற்போது அறிக்கையை அளித்துள்ளது. அதில், கபீல் கான் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், "என் குழந்தை பத்து மாதமாக இருந்தபோது நான் சிறைக்கு சென்றேன். நான் இப்போது வெளியே வந்தபோது என் குழந்தைக்கு நான் யார் என்று தெரியவில்லை. உண்மையான குற்றவாளியை அரசு கண்டுபிடிக்காததால், நான் பலிகடா ஆக்கப்பட்டேன். அரசு என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்றார். இந்த வழக்கில் அவரை கைது செய்த உத்தரப் பிரதேச அரசுக்கு இது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.