இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலியில் கடந்த 1940ஆம் ஆண்டில் விமான தளம் அமைக்கப்பட்டது. இலங்கையின் விடுதலைக்குப் பின்னர் சென்னையிலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில் இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்ததால், 1983ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
2009இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி, பலாலி விமான தளத்தின் புனரமைப்பு பணிகளை இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் பலாலி விமான தளம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
இந்த விமான தளம் இன்று திறக்கப்பட்டதால், சென்னையிலிருந்து விமான சேவை தொடங்கியது. முன்னதாக, இந்திய தொழில்நுட்ப அலுவலர்கள் அங்கு சென்று விமான ஓடுதளம் குறித்து ஆராய்ந்தனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தனது விமானப் பயணத்தை ஏர் இந்தியா விமானம் தொடங்கியது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது, இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய இலங்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க, இலங்கையிலிருந்து இந்தியா முழுக்க பயணம் மேற்கொள்ள இது உதவியாக இருக்கும் என்றார். யாழ்ப்பாணம், இலங்கையின் வடக்கில் அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு செல்ல வேண்டுமானால், முதலில் தலைநகர் கொழும்புக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரம் ரயிலில் பயணம் மேற்கொண்டு கடக்க வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என அனைவரும் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.
வரும்காலங்களில் டெல்லி, மதுரை, தூத்துக்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் விமான சேவைகள் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: நாங்கள் சாவர்கருக்கு எதிரானவர்கள் அல்ல - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்