குறைந்த விலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் கேரள மக்களுக்காக இயங்கிவரும் மின்சாரப் படகான ஆதித்யாவிற்கு, உலகின் மிகச்சிறந்த மின்சாரப் படகாக தேர்வு செய்யப்பட்டு குஸ்டாவ் ட்ரூவ் குளோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்காக ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூரிலிக்ருந்து 50க்கும் மேற்பட்ட படகுகள் போட்டியில் கலந்துகொண்டன. போட்டியில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில் ஆதித்யாவிற்கு குஸ்டாவ் ட்ரூவ் குளோபல் விருது கிடைத்துள்ளது. இந்தியாவின் முதல் சூரிய படகு இதுவாகும்.
இந்தப் படகானது கொச்சியைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நாவால்ட் சோலார் அண்டு எலக்ட்ரிக் போட் நிறுவனத்தால் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் ஆதித்யா சோலார் படகு 75 பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மாநில அரசின் நீர்ப் போக்குவரத்து துறையால் கோட்டயம் - ஆலப்புழா மாவட்டங்களை இணைக்கும் வகையில் வைக்கம்-தவணக்கடவ் பகுதியில் இயக்கப்பட்டுவருகிறது.
நாள் ஒன்றுக்கு டீசல் இன்ஜினால் 8 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில், சோலார் படகிற்கு 180 ரூபாய் மட்டுமே செலவாகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் படகின் மூலம் ஒரு லட்சம் லிட்டர் டீசல் சேமிக்கப்பட்டுள்ளது.