கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையில் மருத்துவத்துறையினர் தீவிரப் பணியாற்றிவரும் வேளையில் அறிவியல் ஆய்வாளர்களும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை இந்த நேரத்தில் உருவாக்கிவருகின்றனர். இந்தியாவின் முன்னணி ஆய்வு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. தற்போது நாட்டின் முதல் நடமாடும் ஆய்வகத்தை வடிவமைத்துள்ளது.
வைரஸ் கிருமிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த நடமாடும் ஆய்வகம் தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலிக்காட்சி மூலம் இந்த ஆய்வகத்தை தொடங்கிவைத்தார். கரோனா பாதிப்பு காலத்தில் இதுபோன்ற முக்கிய ஆய்வுப்பணிகளை திறம்பட மேற்கொள்ளும் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்திற்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இத்தகைய இக்கட்டான சூழலில் மருத்துவ பாதுகாப்பு உபகரணக்கருவிகளை அதிகளவில் தயாரிக்க வேண்டும் என டி.ஆர்.டி.ஓ நிறுவனத்திற்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தொடக்க விழாவில் தெலங்கானா தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி. ராமாராவ், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிசான் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இரண்டாயிரம் மருத்துவர்களை பணியமர்த்தும் பணியில் ராஜஸ்தான்