இந்து புனித யாத்திரையாகக் கருதப்படும் கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களின் பயண தூரத்தை சுருக்கும் வகையில், உத்தரகாண்ட் மாநிலம் தார்சூலாவிலிருந்து லிப்புலே வரை 80 கி.மீ. நீளத்திற்குப் புதிய சாலை அமைக்கப்பட்டது. இதைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மே மாதம் திறந்துவைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நேபாள அரசு லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபட திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இது இந்திய - நேபாள உறவுகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே உள்ள உறவு மிகவும் ஆழமானது. எந்த அந்நிய சக்திகளாலும் இந்த உறவில் பிளவுகளை ஏற்படுத்த முடியாது.
வரலாற்று ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மட்டுமல்லாமல் இரு தேசங்களும் ஆன்மிக ரீதியாகவும் தொடர்புகொண்டுள்ளன. இந்தியா அதை ஒருபோதும் மறக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான உறவில் எப்படி விரிசல் ஏற்படும்?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சமீபத்தில் இந்தியா திறந்த புதிய சாலை நேபாள மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால், அது உரிய பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யப்படும். இந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான உறவில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது" என்றார்.
மேலும், நரேந்திர மோடி தேர்தலில் முன்வைத்த முத்தலாக் தடைச்சட்டம், சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீது பாய்ந்த வழக்கு