உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்றுடன் 30 நாள்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட நன்மைகள், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த ஐஏஎஸ் அலுவலர் மிஸ்ரா பேசுகையில்,
"ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவு நாட்டு மக்களுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தியபோதும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா தற்போது நல்ல நிலையில் உள்ளது.
கரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தொடர்ச்சியாகச் சோதனைகள் செய்வது, எதிர்காலத்திற்கான தயாரிப்பை மேற்கொள்வது உள்ளிட்ட பன்முக வியூகங்களைக் கடைப்பிடித்தோம்.
கடந்த ஒரு மாதத்தில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்வதற்கான சோதனை முறையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மார்ச் 23 அன்று, நாடு முழுவதும் 14 ஆயிரத்து 950 சோதனைகளை நடத்திருந்த நிலையில், ஏப்ரல் 22ஆம் தேதிவரை, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 30 நாள்களில் வைரஸ் பாதிப்புக்கான சோதனையை 24 மடங்கு அதிகரித்தபோதிலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் விழுக்காடு உயரவில்லை.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சி இல்லை. மார்ச் 24ஆம் தேதியன்று நாடு முழுவதும் கரோனாவால் 606 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது, ஏப்ரல் 23ஆம் தேதிவரை 21 ஆயிரத்து 393 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்
அரசின் புள்ளிவிவரங்களின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக சிறப்பான சிகிச்சை அளிக்க 163 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கென்று நான்காயிரத்து 279 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தேவை என்ற நிலையில், தற்போது நம் நாட்டில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 26 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகம் அவமதிப்பதன் விளைவாக பொதுமக்கள் சளி, காய்ச்சல் போன்ற சாதாரண பிரச்னைகளை வெளியே சொல்லாமலும், உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாமலும் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கரோனா அறிகுறி உள்ளவர்கள் தாமாகவே முன்வந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதன்மூலம் வைரஸ் பரவல், இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் பார்க்க: செவிலிக்கு கரோனா: மருத்துவமனைக்கு சீல்வைப்பு