திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிதி பங்களிப்புடன் ரூ.6.23 கோடி நிதி உதவியில் பல்வேறு மருத்துவ சேவைகளை இன்று (பிப்.13) மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என நடிகர் கஞ்சா கருப்பு குற்றம் சாட்டியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் அடைமொழி வைத்து என்னால் அவரது பெயரைக் கூற முடியாது. கருப்பு தன் மகன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் இருந்துள்ளார்கள். ஆனால், அவர் மருத்துவமனையில் இறந்தவர்கள் மருத்துவம் பார்ப்பதாக சினிமா வசனம் போல் பேசியுள்ளார்.
கஞ்சா கருப்பு விவகாரம்:
இந்த விவகாரம் குறித்துத் தெரிய வந்தவுடன் சென்னை மாநகர மேயர், அந்த மருத்துவமனையில் எத்தனை மருத்துவர்கள் உள்ளனர்? எத்தனை பேர் அன்று குறிப்பிட்டிருந்த அரசு விடுமுறை நாளன்று பணியில் இருந்தனர்? என்பது குறித்து அனைத்து தகவலையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். எனவே அவர் கூறுவது எப்படி உண்மையாகும் என்றார்.
மேலும் பேசிய அவர், “சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் பிரசவத்திற்குச் சென்ற கர்ப்பிணிக்கு குழந்தை இறந்து பிறந்ததாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவல். கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை நிர்வாகம் சரி இல்லை எனக் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் ருத்ரன் பதிவு செய்த செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.
விவகாரமாக மாற்றுகின்றனர்:
சமூக வலைத்தளங்களில் அரசு மருத்துவமனைகளில் நடக்கும் சிறிய செய்தியாக இருந்தாலும் பெரிதாகத் திரிக்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகின்றன. அரசு மருத்துவமனை மக்களுக்கு அனைத்து சேவைகளைச் செய்வதால் சிலருக்குப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இது போன்ற வதந்திகளை பரப்புகின்றனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 2.33 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவ சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டது #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/iR9PmtIfbn
— Subramanian.Ma (@Subramanian_ma) February 12, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பக்கவாதம் நோயாளிக்கு தூய்மைப்பணியாளர் சிகிச்சை அளித்ததாக தவறாக செய்தி பரப்பப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைவிடவும் மருத்துவ கட்டமைப்பு தமிழ்நாட்டில் தான் மிக நன்றாக உள்ளது. நிரப்பப்படாமல் உள்ள 2642 மருத்துவர் காலியிடங்களுக்கான தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்றுள்ள மருத்துவர்களுக்கு விரைவில் அவரவர்கள் விரும்பும் இடத்தில் பணி அமைத்துத் தர உள்ளோம். இந்த மாத இறுதியில் பணி ஆணை வழங்க உள்ளது.
திருவள்ளூர் - பூவிருந்தமல்லியில் 1.95 கோடி மதிப்பீட்டில் 6 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது... #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/licVaLPdKe
— Subramanian.Ma (@Subramanian_ma) February 12, 2025
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் ஐபிஎஸ் பணியிடைநீக்கம்!
எதிர்கால மருத்துவ கட்டமைப்பு:
அரசு மருத்துவத் துறை நிர்வாகத்தை எந்த காலத்திலும் தனியாருக்கு தர மாட்டோம். திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறை முயற்சியின் காரணமாகச் சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 797 மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு சரி செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவர் காப்பீடு பெறுவதற்கான நடமாடும் வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வரும் இருதய நோயாளிகள் அதற்கான கருவிகள் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்று வருவதைத் தவிர்க்கும் வகையில் 8 கோடி ரூபாய் செலவில் புதிய இருதய சிகிச்சை கருவி விரைவில் அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்குக் கூடுதலாக 9 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் விரைவில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்” என்றார்.