ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பேடகுராபடு கிராமத்தில் வசித்து வந்த ஸ்ரீஜா என்ற பெண்ணின் பெற்றோர் இறந்து விடவே, மேற்கு கோதாவரி மாவட்டம் டெண்டுலூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் செல்கிறார். அங்கு வசித்து வந்த ஸ்ரீஜாவின் வாழ்க்கையில் அப்போது பேரிடி வீழ்ந்துள்ளது.
அதில், ஸ்ரீஜாவின் அக்காவும், அக்கா கணவரும் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து விடுகின்றனர். இதனால் அவர்களின் குழந்தையான தேஜ் சாயை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஸ்ரீஜாவின் மீது விழுகிறது.
இதனால் பிழைப்புத்தேடி எள்ளூர் செல்கிறார் ஸ்ரீஜா. அப்போது அந்த ஊரைச் சேர்ந்த புத்தா ரவி என்பவருக்கும், இவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
சிறிது காலம் சந்தோஷமாக வாழ்கின்றனர். பின்னர் கொஞ்ச நாள்கள் கழித்து புத்தா ரவிக்கு வேறு பல பெண்களுடன் நெருக்கம் ஏற்படுகிறது. இதனால் தினமும் ஸ்ரீஜாவை புத்தா ரவி துன்புறுத்த ஆரம்பிக்கிறான். இதனிடையில் ஸ்ரீஜாவிற்கு ஒரு பெண் குழந்தைப் பிறக்கிறது.
இந்நிலையில், கணவன் துன்புறுத்தல் குறித்து, ஸ்ரீஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்க, பின்னர் சிறிது நாட்கள் மவுனமாக இருந்த புத்தா ரவி, பின்னர் வேறு ஒரு பெண்ணுடன் ஊரை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு போட்டதால், ஸ்ரீஜா அன்றாட வாழ்க்கையை நடத்தப் போராடி வந்துள்ளார். தான் பெற்றெடுத்த மகளை விற்க முடிவு செய்து, விற்க முயன்றுள்ளார்.
அதனையறிந்த ஒரு தொண்டு நிறுவனம் இதை நிறுத்தி, அந்தப் பெண் குழந்தையை குழந்தைப் பராமரிப்பு மையத்தில் விட்டது. இது குறித்து தற்போது காவல் துறையினர், அரசு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ஸ்ரீஜா கூறுகையில், 'தன் குழந்தையை விற்றால், அந்த குழந்தை விற்கப்படும் இடத்தில் நன்றாக வளரும். அப்படி விற்கும் பணத்தில் என் மகனான, அதாவது அக்கா மகனுக்கு என்னால் கொஞ்ச நாள்கள் உணவளிக்க முடியும்' என்றார்.
இதையும் படிங்க...வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதான பிக்பாஸ் போட்டியாளர்!