அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்யும் வகையில், ஹெச்-1 பி, ஹெச்-2 பி, எல் மற்றும் ஜே பிரிவு விசாக்கள் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்யப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இது வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றாலும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்கள் பெரும் பிரச்னையை எதிர்கொள்வார்கள்.
ஹெச்-1 பி விசா என்றால் என்ன?
ஹெச்-1 பி விசா என்பது நிரந்தரமாகக் குடியேறாத வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ஒரு வகையான விசா முறை. இதன் மூலம், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குபவர்களை அமெரிக்க நிறுவனங்கள் பனியமர்த்திக் கொள்ள முடியும்.
அமெரிக்காவில் ஆராய்ச்சி, பொறியியல், மென்பொருள் துறையில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய 1990களில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவில் வழங்கப்படும் விசா வகைகள்
- ஹெச்-1 பி விசா: பல்வேறு துறைகளிலும், குறிப்பாக தொழில்நுட்பத் துறையில், திறமையான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசா
- ஹெச் -2 பி விசா: விவசாயம் சாராத பருவகால தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசா
- ஹெச்-4 விசா: ஹெச்-1பி மற்றும் ஹெச்-2பி விசாக்களை வைத்திருக்கும் நபர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விசா
- ஜே-1 விசா: கலாசார மற்றும் கல்வி பரிமாற்றத் திட்டம், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் விசா
- ஜே-2 விசா: ஜே-1 விசாக்களை வைத்திருக்கும் நபர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விசா
- எல் -1 விசா: ஒரு நிறுவனத்தின் உயர் மட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் விசா
- எல்-2 விசா: எல் -1 விசாக்களை வைத்திருக்கும் நபர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விசா
யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?
பெரும்பாலான அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தேர்வு செய்கின்றனர். குறிப்பாக, இத்திட்டத்தால் அதிக பலன்களைப் பெறும் நாடாக இந்தியா உள்ளது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் விசாக்களில், சுமார் 70 விழுக்காடு விசாக்கள் இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும் 65 ஆயிரம் விசாக்கள், அதிக திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன.
மீதமுள்ளவை, ஏதேனும் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி அல்லது முதுகலைப் பட்டம் பெற்ற திறமையானவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
தற்போது சுமார் மூன்று லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் ஹெச்-1 பி விசா பெற்று பணியாற்றி வருகின்றனர். ஹெச்-1 பி விசா வைத்திருக்கும் ஒரு நபர் வேலையிழக்கும்பட்சத்தில், அடுத்த இரண்டு மாதத்திற்குள் அவர் புதிய வேலையில் சேர வேண்டும். இல்லையென்றால் அவரது விசா ரத்து செய்யப்படும்.
விசாக்கள் அனைத்தும் இந்தாண்டு இறுதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளதால், புதிதாக ஹெச்-1 பி விசாக்களைப் பெற அடுத்தாண்டு வரை இந்தியர்கள் காத்திருக்க வேண்டும்.
மேலும், எந்த நிறுவனத்தாலும் இந்தாண்டு தனது ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என்பதால் முக்கிய பிராஜக்ட்களை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.
இதையும் படிங்க: 'அதிருப்தி அளிக்கிறது' - ட்ரம்ப்பின் விசா கட்டுப்பாடுகள் குறித்து சுந்தர் பிச்சை