வழிபாட்டு தலங்களுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வகையில் ரஷ்யாவிலிருந்து எஸ்தர் பக்ரதுணி, அவரது தாயார் ஒலிவியா ஆகியோர் பிப்ரவரி 6ஆம் தேதி இந்தியாவிற்கு வந்துள்ளனர். கரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அவர்கள் இந்தியாவிலேயே முடங்கி பணம் இல்லாமல் தவித்துவந்துள்ளனர். நமது ஈடிவி பாரத்தில் அவர்களின் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, எஸ்தருக்கு நிதியுதவி கிடைத்துள்ளது.
தான் அனுபவித்த சிரமங்கள் குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், "இஸ்கான் கோயிலுக்கு செல்வதற்காக பிப்ரவரி 6ஆம் தேதி இந்தியாவிற்கு வந்தோம். ஊரடங்கு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சிக்கினோம். தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் இருந்த பணத்தை வைத்து திருமலைக்கு சென்றோம். ஆனால், விதிகளின்படி வெளிநாட்டவரான எங்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.
என்னை திருப்பதியில் விட்டுவிட்டு தாயார் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிருந்தாவனுக்கு சென்றார். பணம் இல்லாத காரணத்தால் அவரால் திரும்பிவர முடியவில்லை. ஊரடங்கு காலம் முழுவதும் தனியாக சிக்கி தவித்தோம்" என்றார். பின்னர், விடுதி மேலாளர் எஸ்தரை கப்பில தீர்த்தத்தில் தங்க வைத்தார். ஓவியம் மற்றும் சித்திரத்தையலை (எம்பிராய்டிங்) செய்து எஸ்தர் பணம் சம்பாதித்துள்ளார்.
இதையடுத்து இதுகுறித்த செய்தி நமது தளத்தில் வெளியாகி அவரின் விமான பயணத்திற்காக 25,000 ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், எம்எல்ஏ, அரசு அலுவலர் என இருவர் தலா 10,000 ரூபாய் வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவால் பழம் விற்கும் பேராசிரியை!