கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின்போது, டெல்லி நிஜாமுதீன் மார்கஸில் நடைபெற்ற சமய மாநாட்டில், விசா விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக மிஷனரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இந்தோனேசியர்கள் 198 பேர் உள்பட பல வெளிநாட்டினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மனு பேரம் பேசுவதன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, குறைந்த தண்டனை வழங்க கேட்டுக்கொண்டனர். குற்றவியல் நடைமுறை சட்டம் அதிகபட்சமாக ஏழு ஆண்டு சிறை தண்டனை உள்ள வழக்குகளில் பேரம் பேச அனுமதிக்கிறது.
இதன் அடிப்படையில், மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் வசுந்தரா ஆசாத் இந்தோனேசியர்கள் 100 பேருக்கு தலா ரூ. 7,000 அபராதம் செலுத்தி வழக்கிலிருந்து விலகிக்கொள்ள அனுமதி வழங்கியதாக, வழக்கறிஞர்கள் ஆஷிமா மண்ட்லா, பாஹிம் கான், அகமது கான் ஆகியோர் தெரிவித்தனர்.
மீதமுள்ள இந்தோனேசியர்கள் 98 பேருக்கு தலா ரூ. 5,000 அபராதம் செலுத்தி வழக்கிலிருந்த விலகிக்கொள்ள மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் சுவாதி சர்மா அனுமதித்தார். அனைவரும் தங்கள் அபராத தொகையை PM-CARES நிதியில் டெபாசிட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.