கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வந்தது.
ஆனால், சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய அரசு மறுத்து வந்தது. இந்நிலையில், முதல்முறையாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சீனாவின் ஊடுருவல் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ஆவணத்தில், ''எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சீன ராணுவத்தின் ஊடுருவல் மே மாதம் 5ஆம் தேதிக்குப் பிறகு அதிகரித்தது. பாங்சாங் சோ, கோக்ரா, குக்ராங் நாலா ஆகிய பகுதிகளில் சீன ராணுவத்தினர் மே 17, 18 ஆகிய தேதிகளில் எல்லை மீறி நுழைந்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அத்துமீறலைக் குறைக்க கள அளவில் பேச்சுச்வார்த்தை நடத்தப்பட்டதாகவும், பின்னர் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை ஜூன் 6ஆம் தேதி நடத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதன் பின்னரே ஜூன் 15ஆம் தேதி இருநாட்டு ராணுவத்தினருக்கிடையே மோதல் நிகழ்ந்துள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையே எல்லை விவகாரத்தில் இப்போது உள்ள நிலைப்பாடே தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கிழக்கு லடாக்கில் சீனாவின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றன எனவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரள, கர்நாடகாவுக்கு ரெட் அலெர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்!