உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 83 பேரைத் தாக்கியுள்ளது. அவர்களில், 68 பேர் இந்தியர்கள். மீதமுள்ள 17 பேரில் 16 பேர் இத்தாலியர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், “ஜப்பானில் இருந்து வெளியேற்றப்பட்ட 124 பேரும், சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 112 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லையென்பதால் இன்று விடுவிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு "சுகாதார அவசரநிலை" அல்ல. ஆகவே பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. விமான நிலையங்களில் சோதனை அதிகரிக்கப்படும். மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை வங்கதேசம் உள்ளிட்ட எல்லை நாடுகளுடனான பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு மாநில பேரிடர் நிதியை (SDRF) அந்தந்த மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்றார்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக இணைச் செயலாளர் ரூபினா அலி கூறுகையில், "இன்று விமானம் மூலமாக 44 இந்தியர்களைத் திரும்ப அழைத்து வந்துள்ளோம். அந்த விமானத்தில் இந்தியா வந்தவர்கள் கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இத்தாலியின் மிலன் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு ஏர் இந்தியா விமானம் டெல்லியிலிருந்து நாளை (மார்ச் 15) புறப்படும்” என்றார்.
இதையும் படிங்க: இரண்டாவது உயிரை காவு வாங்கிய கொரோனா!