ஹைதராபாத்தில் கரோனா அறிகுறிகளுடன் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நரேந்திர சிங் எனும் நபர் கடந்த 15 நாள்களாக காணாமல் போய் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாயமான நபரின் சகோதரர் முகேஷ் சிங் கூறுகையில், "என் சகோதரர் நரேந்திர சிங்குக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரை கிங் கோட்டி மருத்துவமனையில் கடந்த மே 30ஆம் தேதி சேர்த்தோம். பின்னர், அதே தினம் அங்கிருந்து அவர் ஆம்புலனஸ் மூலம் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதற்குப் பிறகு அவரிடமிருந்து எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கடைசியாக ஜூன் இரண்டாம் தேதி சக நோயாளியுடன் பேசியுள்ளார். அதற்குப் பிறகு அவர் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளோம். அவர் மாயமாகி இன்றோடு 15 நாள்கள் ஆகின்றன" என்றார்.
இது குறித்து மங்கல்காட் காவல் நிலைய ஆய்வாளர் ஜி ரன்வீர் ரெட்டி கூறுகையில், "நரேந்தர சிங்கை கண்டுபிடித்துத் தருமாறு கடந்த ஜூன் ஆறாம் தேதி அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். அவர் கோவிட்-19 நோயாளியல்ல. அவரை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து அவரை தேடி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காந்தி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என தெலங்கானா அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தென் கொரியாவை எச்சரிக்கும் வடகொரிய அதிபரின் சகோதரி!