மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. 230 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் போதிய பெரும்பான்மை இல்லாததால் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, நான்கு சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி நடத்திவருகிறது.
இந்த ஆட்சியை ஆட்டம் காணவைக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. ஆபரேஷன் கமலா என்ற பெயரில் இது நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் ஹர்தீப்சிங் டங் திடீரென்று ராஜிநாமா செய்துள்ளார்.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று மாநில முதலமைச்சர் கமல்நாத் நள்ளிரவில் முக்கிய அமைச்சர்கள் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மா, பாஜகவின் இந்த ஆட்டத்திற்கு தாங்கள் பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் இளம் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் முதலமைச்சர் கமல்நாத்துக்கும் பனிப்போர் நிலவுவதால், அங்கு அரசுக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்கொடித் தூக்கியுள்ளனர்.
இந்தத் தலைவலியை அதிகமாக்கும்வகையில் பாஜகவும் உறுப்பினர்களுக்கு வலைவீசி கமல்நாத் அரசுக்கு குடைச்சல் அளித்துவருகிறது.
இதையும் படிங்க: 'இது ஒருவகை சர்வாதிகாரம்'- குமுறும் காங்கிரஸ் எம்.பி.