இந்திய, சீன எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக அந்நாடு ஒத்துக் கொண்டது. இதனால், இரு நாட்டுக்கிடையே பதற்றம் நிலவியது. இதனை தணிக்கும் வகையில் உயர்மட்ட ராணுவ வீரர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி எல்லைப் பகுதிகளில் படைகளை திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ராணுவத்தை திரும்பப்பெறும் நடவடிக்கை ஹாட் ஸ்பிரிங், கோக்ரா பகுதிகளில் நடைபெற்றுவந்தது. ஆனால், பிங்கர் 5 பகுதியிலிருந்து படைகளை திரும்பப்பெற சீனா மறுத்துவருகிறது. மோதலை குறைப்பதற்கு பதிலாக எல்லை பகுதிகளில் 40,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம், இறுதிகட்ட பேச்சுவார்த்தையை இரு நாட்டு உயர்மட்ட ராணுவ வீரர்கள் மேற்கொண்டனர். இருந்தபோதிலும், ராணுவத்தை திரும்பப்பெறும் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக அவர்கள் இருந்த சிரிஜப் பகுதிக்கு செல்லாமல், பிங்கர் 5 பகுதியிலேயே நிலைபெற்றுள்ளனர்.
ஹாட் ஸ்பிரிங், கோக்ரா பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் கூடாரங்களை அமைத்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பரபரப்பான கட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியை சந்தித்த உள்துறை அமைச்சர்