பெர்லின்: ஜெர்மனியில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாய கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. பிரதமராக மெர்ஸ் பதவி ஏற்க உள்ளார்.
சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவு என்ற கொள்கையுடன் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரநாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் பிரதமராக பிரீட்ரிக் மெர்ஸ் பதவி ஏற்க உள்ளார். இவர், கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான ஏஞ்சலா மெர்கலின் எதிர்ப்பாளர்களில் ஒருவராவார். ஏஞ்சலா மெர்கல் ஆட்சியில் சட்டவிரோத குடியேற்றங்கள் அதிக அளவு நடந்ததாக மெர்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். 69 வயதான மெர்ஸ், பிளாக் ராக் என்ற முதலீடு நிதி நிறுவனம்,பல்வேறு பெருநிறுவனங்களின் நிர்வாகத்தில் அங்கம் வகித்தவர் என்ற வகையில் வலுவான வணிகப் பிண்ணனி கொண்டவர். இதுவரை அவர் அரசு ரீதியிலான எந்த பதவியும் வகித்ததில்லை.
தற்போதைய பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியில் மெர்ஸ் பிரதமர் வேட்பாளராக களம் இறங்கினார். தேர்தல் பிரசாரத்தின் போது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, சர்வதேச அளவில் ஜெர்மனியை மீண்டும் கட்டமைப்பது என்ற கோஷத்தை முன் வைத்திருந்தார்.
இதையும் படிங்க: திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏமாற்றும் வடமாநில இடைத்தரகர்கள்! பணம் பறிப்பு, பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் அவலம்!
எந்த ஒரு ஆவணமும் இன்றி ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு அனுமதி இல்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். சட்ட ஒழுங்கு பிரச்னையில் கவனம் செலுத்துவது, அணு சக்தியை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்வது என தமது திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக கூறியிருந்தார்.
1955-ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பிறந்த ரோமன் கத்தோலிக்கரான மெர்ஸ், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் சாவர்லேண்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார். பைலட் லைசென்ஸ் பெற்றவர். தன்னுடைய தனிப்பட்ட ஜெட் விமானத்தில் அவ்வப்போது பறப்பதில் ஆர்வம் கொண்டவர். சார்லோட்டி மெர்ஸ் என்ற நீதிபதியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு 1989ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கிறிஸ்வத ஜனநாயக கட்சியில் இருந்த போதிலும் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், இவரை ஓரம்கட்டி வைத்திருந்தார். எனவே வணிகத்தில் தீவிரம் காட்டி வந்த மெர்ஸ் தம்முடைய பிரதமர் ஆகும் கனவை தொடர்ந்து வந்தார். இப்போது அவரது கனவு நனவாக உள்ளது.