ஹைதராபாத் / தெலங்கானா: "மனோஜ்... ஸ்ரீனிவாஸ்... சந்தீப்... எங்கே இருக்கிறீர்கள்? மனோஜ்... உங்களுக்கு கேட்கிறதா?" மீட்புக் குழுவினர் உரத்த குரலில் மீண்டும் மீண்டும் அழைக்கிறார்கள். ஆனால், சுரங்கத்திற்குள் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மறுபுறம், நான்கு மீட்டர் உயரம் கொண்ட சுரங்கத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது.
அரை கிலோமீட்டர் தூரத்திற்கு சேறும் சகதியுமாக இருந்தது. வெறும் கண்ணால் பார்க்க முடியாத இருள் சூழ்ந்திருந்தது. விபத்து நடந்த இடத்தில் இரும்பு கம்பிகள் மற்றும் பிற உபகரணங்கள் சிதறிக்கிடக்கின்றன. உட்புறம், வெளிப்புற தொடர்பு அமைப்புகளும் செயலிழந்திருந்தன. ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கத்தில் நிலவிய மிக சிக்கலான சூழ்நிலைகள் இவை.

சுரங்கத்தில் சிக்கிய எட்டு பேரை மீட்கும் முயற்சிகள் மூன்றாவது நாளாகத் தொடர்ந்து வருகின்றன. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF / என்.டி.ஆர்.எஃப்) உடன் பிற குழுக்கள் இணைந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டன. ஆனால், எதுவும் சாத்தியப்படவில்லை என்பதால், சுரங்கம் தோண்டும் இயந்திரம் (TBM / டி.பி.எம்) பயன்படுத்தப்பட்டது.
அங்கு அருகில் சென்று பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை அழைத்தும் எந்த பதிலும் வரவில்லை. சேறும் சகதியும், TBM இயந்திரத்தின் மேல் பகுதி சரிந்திருப்பதும், மற்ற உபகரணங்கள் குறுக்கே கிடப்பதும் மீட்புப் பணிகளுக்கு தடையாக இருப்பதாக கூறப்படுகின்றன.
இந்நிலையில், எலி சுரங்கத் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படும், மண்ணைத் துரந்து முன்னேறி செல்லும் சுரங்கப் பணியாளர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீட்புப் பணிகள்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) அதிகாலை முதல், ராணுவம், என்.டி.ஆர்.எஃப் உள்பட பிற பணியாளர்கள் டார்ச் வெளிச்சத்தில் குழுக்களாக உள்ளே சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். ட்ரோன்கள், ஸ்கேனர்களைப் பயன்படுத்தி சுரங்கத்தின் உட்புற நிலையை மதிப்பீடு செய்தனர். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவ்வப்போது நிலைமையை ஆய்வு செய்து வருகிறார்.
தொழிலாளர்களைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அலுவலர்களிடம் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள் உத்தம் குமார் ரெட்டி, ஜூப்பள்ளி கிருஷ்ணா ராவ் ஆகியோர் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
சுரங்கத்தில் பணிபுரியும் சன்னி சிங், குர்பிரீத் சிங், சந்தோஷ் சாஹு, அனுஜ் சாஹு, ஜக்தஜாஸ், சந்தீப் சாஹு, மனோஜ் குமார், ஸ்ரீனிவாஸ் ஆகியோர் சனிக்கிழமை (பிப்ரவரி 22) அன்று மண் சரிந்து இடிந்து விழுந்ததில் காணாமல் போயினர். ஏதேனும் ஆதரவைப் பயன்படுத்தி அவர்களில் யாராவது உதவிக்காக காத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சம்பவம் நடந்தது அடர்ந்த நல்லமலா காடுகள் சார்ந்த வனப்பகுதி என்பதால், மொபைல் உள்பட எந்த சிக்னல்களும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மீட்புக் குழுவினர் உயர் அதிர்வெண் உபகரணங்களுடன் கூடிய சிறந்த ஆண்டனாக்களை அமைத்துள்ளனர். இருப்பினும், சிக்னல்கள் சுரங்கத்தின் நடுப்பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், மீட்புப் பணிகளின் முன்னேற்றத்தில் சிரமங்கள் உள்ளதாக தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்களின் ஆய்வு
சுரங்கத்திற்குள் நுழைய ஒரு உத்தியை வகுக்க, அமைச்சர்கள் உத்தம், ஜூப்பள்ளி கிருஷ்ணா ராவ் ஆகியோர் ராணுவம், NDRF, SDRF படைகளின் தலைவர்கள், ராபின்சன் கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பல ஆய்வுகளை நடத்தினர். தரை மேற்பரப்பில் இருந்து துளைகள் செய்து உள்ளே நுழையும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.
சுரங்கத்தின் உள்ளே சென்று அங்கிருந்து மண் மற்றும் சேற்றை விரைவாக பின்னோக்கி நகர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. சுரங்கப் பகுதி தொடர்பான வரைபடங்கள் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. நீர்ப்பாசனத் துறை முதன்மைச் செயலாளர் ராகுல் போஜ்ஜா, பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் அரவிந்த் குமார், ஹைட்ரா ஆணையர் ரங்கநாத் ஆகியோரும் நிலைமையை ஆய்வு செய்தனர்.

மூன்று கடற்படை ஹெலிகாப்டர்கள் வருகை
அமைச்சர் உத்தமின் ஆலோசனையின் பேரில், மத்திய அரசு விசாகப்பட்டினத்தில் இருந்து மூன்று ஹெலிகாப்டர்களில் கடற்படை உறுப்பினர்களை சேதமடைந்த சுரங்கம் அமைந்திருக்கும் பகுதிக்கு அனுப்பியது. அந்தப் படை முதலில் ஹெலிகாப்டர்களில் இருந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தது.
சுரங்கத்தில் சிக்கியவர்களை வெளியே கொண்டு வர இன்னும் இரண்டு நாட்களாவது ஆகலாம் என்று சிங்கரேணி மீட்புக் குழு பொது மேலாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்துள்ளார். ‘ஈநாடு-ஈடிவி’க்கு அவர் அளித்தப் பேட்டியில், “அமைச்சர் உத்தம் குமார் ரெட்டியின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் திட்டம் வகுத்துள்ளார்.
இந்த உத்தரவின்படி, சிங்கரேணியிலிருந்து வந்த 20 உறுப்பினர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காடுகள் சூழ்ந்த இடம், நெடுந்தூரம் சேறு மற்றும் சகதி ஆகியவற்றின் காரணத்தினால், சிக்கியவர்களை வெளியே கொண்டு வர இரண்டு நாள்கள் வரை ஆகலாம்,” என்று தெரிவித்தார்.