கடந்த ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைத்தது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதலமைச்சரானார். பின்னர், இந்தக் கூட்டணியிலிருந்து 17 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.
இதனிடையே, இவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். பின்னர் நடந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி தோற்றதன் மூலம், பாஜகவின் எடியூரப்பா அம்மாநில முதலமைச்சராக நான்காவது முறையாகப் பதவி ஏற்றார். கடந்த நான்கு மாதங்களாக பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை பாஜக தலைவர் அமித் ஷா முன்னின்று நடத்தினார் என எடியூரப்பா கூறும் ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, "பாஜக மேலிட ஆணைக்கினங்க 17 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். எனவே, அவர்களின் தியாகத்தைக் கட்சி தொண்டர்கள் மதிக்க வேண்டும். அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு அவர்களுக்கு சாதகமாக முடியும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்" என்றார்.