கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை பாஜக தன் வசம் இழுப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அளித்தனர். இந்நிலையில் மேலும் காங்கிரஸ் கட்சியில் எட்டு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் மூன்று என மொத்தம் 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரின் செயலரிடம் அளித்துள்ளனர். தற்போது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மாநில ஆளுநரைச் சந்திக்க ராஜ் பவன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கர்நாடகாவில் கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.