ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலுள்ள தனியார் விடுதியில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வெரிமுல் கிரேட் (58) என்பவர் தங்கியிருந்தார். இவர், பிப்ரவரி மாதம் ரஸ்ஸல் டெக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் ஆலோசகராக இந்தியா வந்திருந்தார். அப்போதிருந்து, அவர் இந்த விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், இன்று (ஏப்.26) அவரது மனைவி பெல்ஜியத்திலிருந்து பல முறை அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் பதிலளிக்காததால், விடுதிக்கு அழைத்து கிரேட்டை பார்க்கும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து கிரேட் அறைக்குச் சென்ற விடுதி ஊழியர் அவரது படுக்கையில் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.