டெல்லி: அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் இளைஞர்கள், அமைதியான முறையில் போராட வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு காங்கிரஸ் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாடும் ஆதரவாக இருக்கும். மோடி அரசு நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் வேலை செய்யவில்லை- பெருமுதலாளிகளுக்காகவே வேலை செய்கிறது.
அக்னிபாத் திட்டம் நாட்டு இளைஞர்களை கொல்லும், ராணுவத்தை அழித்துவிடும். மோடி அரசின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டு, பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள்- நேர்மையாகவும், நாட்டின் சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும் செயல்படும் அரசை கொண்டு வாருங்கள். அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை நிறுத்த வேண்டாம், ஆனால் அமைதியாக போராடுங்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:அக்னிபத் போராட்டம் - கண்காணிக்கப்படும் இளைஞர்களின் வாட்ஸ்அப் குழுக்கள்