வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றால் அங்கு ஊழலற்ற ஆட்சி அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களை சந்தித் அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில், "கடந்த எட்டு ஆண்டுகளில், டெல்லியில் மூன்று முறை ஆட்சி அமைத்துள்ளோம். பஞ்சாபில் பிரதான எதிர்கட்சியாக உள்ளோம். இன்று, முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளேன். 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும்.
சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக உத்தரப் பிரதேச மக்கள் டெல்லி வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெரிய மாநிலமாக உள்ள உத்தரப் பிரதேசத்தால் நாட்டின் மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக வர முடியாதா? உத்தரப்பிரதேசத்தின் நேர்மையற்ற அரசியல், ஊழல்மிக்க தலைவர்கள்தான் மாநிலத்தின் வளர்ச்சியை முடக்குகிறார்கள். அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் வாய்ப்பளித்துவிட்டனர். ஆனால். அனைத்து அரசுகளும் ஊழலில்தான் பெரிய சாதனையை படைத்துள்ளது" என்றார்.