விஜயபுரா (கர்நாடகா): பள்ளி மாணவர் ஒருவர், 26 நொடிகளில் மகாத்மா காந்தியின் படத்தை வரைந்து சாதனைப் படைத்துள்ளார்.
ரேவன்னா டொனகி என்ற மாணவன் இந்தியாவின் உயரிய சாதனை புத்தகமான ‘புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’இல் இடம்பிடித்துள்ளார். இணையவழியில் நடத்தப்பட்ட போட்டியில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதுதவிர கர்நாடகாவின் சிறந்த ஓவியர் விருது, ரவி வர்மா விருது போன்ற பல விருதுகளை தன் வசப்படுத்தியுள்ளார். இதைத் தவிர, நாணயங்களைச் சேகரிப்பதிலும் இவருக்கு ஆர்வம் இருந்துள்ளது.
அவர் 1992 முதல் 2019 வரை 2, 5, 10, 20, 25, 50 காசுகளின் பல நாணயங்களைச் சேகரித்துவைத்துள்ளார். பல பிரபலங்களின் உருவப்படங்களுடன் உள்ள நாணயங்களையும் அவர் வைத்துள்ளார். இதற்காக ‘சோலனா உலக சாதனை’ புத்தகத்திலும் இடம்பெற்றார்.
பன்முகத் திறமைகளால் பரிசுகளை அள்ளிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் டொனகி, யோகா கலையிலும் தேர்ச்சிப் பெற்று அதிலும் தனது அசாத்திய திறமையால் சாதனைப் படைத்துள்ளார்.
நம்மிடம் பேசிய அவர், “ஏழை மக்களின் நலனுக்காக உழைக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில், எனது சொந்த செலவில் அனைவருக்கும் ஓவியம், யோகா கற்பிக்க வேண்டும்” என்றார்.