டெல்லி: கடந்த 2005-06 முதல் 2019-21 வரையிலான நிதி ஆண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் நாட்டில் 41 கோடியே 50 லட்சம் பேர் வறுமைக்கோட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்ற குளிர் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில், பா.ஜ.க. எம்.பி. தனஞ்சய பிம்ராவ் மஹாதிக், நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் அளவு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெருநிறுவன விவகாரத்துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், உலகளாவிய பல பரிமாண வறுமை குறுயீடு 2022, ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு முயற்சி மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் குறியீடு உள்ளிட்டவைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41 கோடியே 50 லட்சம் பேர் வறுமைக்கோட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பல பரிமாண வறுமைக்கோடு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு உள்ளதாகவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு ஏற்ப வறுமைக்கோடு புள்ளி விவரம் மாறுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக்கின் பல பரிமாண வறுமைக்கோடு குறியீட்டில் நாட்டில் 25.1 சதவீதம் பேர் பல பரிமாண வறுமையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் உணவு, இருப்பிடம், ஊட்டச்சத்து குறைபாடு, கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி ஒரே நேரத்தில் பல்வேறு தீமைகளை சந்திக்க நேரிடும் மக்கள் பல பரிமாண(Multidimensional) வறுமைக்கோடு குறியீட்டின்கீழ் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்திய மக்கள் தொகையில் கிராமப்புறங்களில் 32.75 சதவீதமும், நகர்ப்புறங்களில் 8.81 சதவீதமும் வறுமைக் கோட்டின்கீழ் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 14.85 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு உள்பட 25 மாநிலங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் - மத்திய அரசு