திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து பழங்கரை அருகே சேலம் - கோவை ஆறு வழிச் சாலையில் நேற்று (அக்.25) இரவு லாரி ஒன்று டீசல் தீர்ந்ததால் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இந்த நிலையில், இன்று (அக்.26) அதிகாலை பெங்களூரிலிருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று, அந்த லாரியின் பின்பக்கம் பலமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காரில் வந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் எம்பிஏ 2ஆம் ஆண்டு படித்து வரும் கோவையைச் சேர்ந்த பலசுப்பிரமணியம் என்பவரது மகள் அபர்ணா (26), அவரது தங்கை ஹேமா (21) மற்றும் கோவையைச் சேர்ந்த அபர்ணாவின் நண்பர் மோனிஷ் (28) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீசார், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.