கோலாகலமாக நடந்த செண்பகவல்லி அம்மன் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
Published : 2 hours ago
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த அக்.18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அம்பாள் ஒவ்வொரு நாளும் புதிய வாகனம் மற்றும் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று மிக வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய திருத் தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்து செல்லபட்டார். அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, தொழிலதிபர் வெங்கடேஷ் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் என திரளானோர் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இவ்விழாவின் 10ஆம் நாளான நாளை அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்வு நடைபெற உள்ளது. இதையடுத்து 11ஆம் நாள் அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.