திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஹேமா. இவர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில், கல்லூரிக்குச் செல்வதற்காக பழனி தீயணைப்பு நிலையம் அருகே சாலை ஓரத்தில் நடந்து வந்துள்ளார்.
அப்போது, அந்த பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த தெருநாய்கள் திடீரென, நடந்து வந்த ஹேமாவை சூழ்ந்து கடிக்க ஆரம்பித்துள்ளது. வலிதாங்க முடியாமல் மாணவி ஹேமா கூச்சலிட்டுள்ளார். இதனைப் பார்த்த எதிரே இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மாணவியை நாய்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளனர்.
தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட மாணவி, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லூரிக்காக சென்ற மாணவியை தெருநாய்கள் சூழ்ந்து கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தெருநாய்களைக் கட்டுப்படுத்திட பழனி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.