வேலூர்: மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை கொடுமைப்படுத்தியதாக டிஐஜி உட்பட மூன்று பேரை சிறைத்துறை டிஜிபி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆயுள் தண்டனைக் கைதியான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவகுமாரை (30) அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதில், சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி ஆயுள் தண்டனைக் கைதி சிவகுமாரை (30) வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாகவும், அப்போது அவர் திருட்டில் ஈடுபட்டதாக சிறையில் வைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள் குமரன் உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், டிஐஜி, எஸ்பி, ஜெயிலர் ஆகிய மூன்று பேரை சிறைத்துறை டிஜிபி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.