உயிரிழந்த குட்டியின் உடலை 4 நாட்களாகியும் தூக்கிச் செல்லும் தாய் குரங்கின் பாசப்போராட்டம்! - Monkey carrying her dead baby
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : May 15, 2024, 7:53 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-05-2024/640-480-21477106-thumbnail-16x9-kuttymonke.jpg)
நீலகிரி: மாவட்டத்தின் முக்கால்வாசி பகுதி வனத்தைக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை, குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால், உணவு மற்றும் குடிநீருக்காக வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதியை நோக்கி படையெடுக்கின்றன.
குறிப்பாக, குன்னூர் வனப்பகுதியில் குரங்குகள் அதிகளவில் வசித்து வரும் நிலையில், உணவுப் பொருட்களை திண்பதற்காக அவை கேபிள் ஒயர்கள் மற்றும் மின்சாரக் கம்பிகளில் தொங்கியவாறு குடியிருப்பு பகுதிக்குச் சென்று வருகின்றன. இதில் எதிர்பாராத விதமாக சில குரங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றன.
அவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்குக் குட்டி ஒன்றின் உடலை, அதன் தாய் கையில் தூக்கிக்கொண்டு சாலையில் சுற்றித் திரிகிறது. குட்டி இறந்து நான்கு நாட்களாகியும் அதனைப் பிரிய முடியாமல் குட்டியின் உடலை கட்டியணைத்தபடி சுற்றித்திரியும் சம்பவம் காண்போரை கண்கலங்க வைக்கிறது. இதையடுத்து, அந்த தாய் குரங்கு தனது குட்டியின் உடலை தூக்கிக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. தாய்க்குரங்கின் இந்த பாசப் போராட்டம் அங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியமடையச் செய்துள்ளது.