ஆவணி சனி மகா பிரதோஷம்; திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெரிய நந்திக்கு சிறப்பு பூஜை! - Tiruvannamalai Annamalaiyar Temple
Published : Sep 1, 2024, 9:37 PM IST
திருவண்ணாமலை: ஆவணி மாத சனி மகா பிரதோஷ தினத்தையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு முன்பு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, ஆவணி மாத சனி மகா பிரதோஷ தினமான நேற்று, பெரிய திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு அரிசிமாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப் பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.