தூத்துக்குடி பட்டாசு ஆலை விபத்து; உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய மாரி செல்வராஜ்! - Thoothukudi firecracker accident
Published : 11 hours ago
தூத்துக்குடி: நாசரேத் அருகில் உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளத்தைச் சேர்ந்த முத்து கண்ணன் (21), நாசரேத்தைச் சேர்ந்த விஜய் (25), புளியங்குளத்தைச் சேர்ந்த செல்வம் (26), ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூரைச் சேர்ந்த ஐசக் பிரசாந்த் (26) ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் வெடி விபத்தில் உயிரிழந்த ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளத்தைச் சேர்ந்த முத்துக்கண்ணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக நேரில் வருந்தார். அங்கு அவரின் வீட்டில் இருந்த முத்துக்கண்ணனின் தந்தை மற்றும் தாயாரிடம் ஆறுதல் கூறினார். மேலும், விபத்து நிகழ்ந்த போது தனது வாழை படம் வெளியானதால் வர இயலவில்லை என்று மாரி செல்வராஜ் வருத்தம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, முத்துக்கண்ணனின் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த ஓலைக் குடிசையில் முத்துக்கண்ணனின் தந்தையுடன் அமர்ந்து குடும்ப நிலையைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, முத்துக்கண்ணன் குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர் விபத்தில் உயிரிழந்த மற்ற மூவரின் வீடுகளுக்கும் சென்று ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.