நினைத்தாலே முக்தி தரும்.. அண்ணாமலையார் கோயிலில் சித்திரை பிரதோஷம்! - chithirai pradosham - CHITHIRAI PRADOSHAM
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06-05-2024/640-480-21396519-thumbnail-16x9-sbxd.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : May 6, 2024, 1:20 PM IST
திருவண்ணாமலை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்திக்கு சித்திரை மாத பிரதோஷம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
பௌர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாத பிரதோஷ தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நந்தி பகவானுக்கு அறுகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.
பிரதோஷ தினத்தின் பொழுது நந்தி வர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
நேற்று நடைபெற்ற சித்திரை மாத பிரதோஷத்தினை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயிலில் பிரதோஷத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து நந்தி வர்மனை வழிபட்டனர்.