குடிபோதையில் நடுரோட்டில் பைக்கில் உறக்கம்.. தள்ளிவிட்டு வாகனத்தை திருடிய மர்ம நபர்! - palani bike theft
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Jul 4, 2024, 3:02 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04-07-2024/640-480-21866168-thumbnail-16x9-dgl.jpg)
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கோதைமங்கலம் பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அந்த மதுபானக் கடையின் முன்புறம் இரவு 11 மணியளவில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து மது அருந்திவிட்டு அந்த வாகனத்தின் மேலேயே போதையில் படுத்து உறங்கியுள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தின் மேலே மதுபோதையில் படுத்து இருந்தவரை கீழே தள்ளி விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் மதுபானக் கடை சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இருசக்கர வாகனம் திருடப்பட்டது தொடர்பாக பழனி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருவதாகவும், எனவே இக்குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.