சீர்காழியில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்..பரிவட்டம் கட்டி சிறப்பு வரவேற்பு! - YOGI BABU VISITS TEMPLE
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Jul 2, 2024, 12:21 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02-07-2024/640-480-21847294-thumbnail-16x9-yogi.jpg)
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில் செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த கோயிலில் அமைந்துள்ள தீர்த்தக்குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4,448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இந்நிலையில், நவக்கிரக தலங்களில் செவ்வாய் பரிகார தலமான இக்கோயிலுக்கு பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு வருகை புரிந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டார். அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து பரிவட்டம் கட்டியும் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.