திருச்சி: திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்புகள் கலந்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து லட்டுவை குஜராத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வு செய்ததில், மாடு, பன்றி கொழுப்புகள் மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இதில் லட்டு செய்வதற்காக நெய் ஒப்பந்தம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவனம் நெய்யில் கலப்படம் இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் நேற்று தெரிவித்தது. மேலும், ஏ ஆர் டெய்ரி நிறுவனத்தின் சார்பில் தர கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் லெனி மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் தங்களது பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
மேலும், திருப்பதி தேவஸ்தானம் எங்களது நெய் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்திய சான்று நாங்கள் அனுப்புவதற்கு முன்பு ஆய்வு செய்த சான்றும் தங்களிடம் உள்ளது என தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் அனிதா, நிறுவனத்தின் கழிவு நீரை ஆய்விற்காக எடுத்துச் சென்றார்.
இந்த நிலையில், இன்று காலை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் 2 மணி நேரத்திற்கு மேலாக ஏ ஆர் டெயரி நிறுவனத்தின் பொருள்களை, அதாவது பால், நெய், பன்னீர், வெண்ணெய், தயிர், மோர், இனிப்பு போன்ற பொருள்களை ஆய்விற்காக எடுத்து வருகின்றனர்.
இதனிடையே, பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் தனது எக்ஸ் தளத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டனர். அதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.புட்ஸ் நிறுவனம்தான் பழனி கோயிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது என்ற செய்தியும், அந்த நிறுவனத்தின் தலைவராகவுள்ள ராஜசேகரன் என்பவர் பழனி கோயில் நிர்வாகக் குழு தலைவராக செயல்படுகிறார் என்ற செய்தியும் சந்தேகங்களை எழுப்பப்படுவதாகவும், தமிழ்நாடு அரசு இவரை பணிநீக்கம் செய்வதுடன் ஆவின் நிறுவனத்திடம் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கு தமிழ்நாடு அரசு நேற்று இதுகுறித்து விளக்கம் ஒன்று அளித்திருந்தது. அதில், பழனி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்தே பெறப்படுகிறது என அறநிலையத்துறை கூறியிருந்தது. மேலும், பழனி கோயில் அறங்காவலர் குழு கடந்த மாதம் பதவிக்காலம் முடிந்துவிட்டது. ராஜசேகரன் என்பவர் குழுவின் தலைவர் இல்லை என்பதும் அவர் குழுவில் ஒரு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பழனி கோயில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் மீது தவறான தகவலை பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.