திருச்சி: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்ல விழாவில் கார் கண்ணாடியை உடைத்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த 5 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கும்பல் இதேபோன்று மக்கள் கூடும் பல இடங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் 2ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், தொழிலதிபர் அம்பானியின் இல்லத் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே பங்கேற்றிருந்தது.
இந்நிலையில், திருமண விழாவிற்கு வந்திருந்தவரின் மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து, 10 லட்சம் ரூபாய் மற்றும் உள்ளே இருந்த லேப்டாப் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்.
தொடர்ந்து தீவிர தேடுதலுக்குப் பின், ஜெகன், தீபக், குணசேகர், முரளி மற்றும் ஏகாம்பரம் ஆகிய ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டு, டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ராஜ்கோட் காவல் கண்காணிப்பாளர் ராஜு பார்கவ் கூறுகையில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம், ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்கள் என்றும், தொழிலதிபர் அம்பானியின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் திருடலாம் என்ற நோக்கத்துடன் அவர்கள் திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
அவர்கள் திருமண நிகழ்ச்சியில் திருடும் நோக்கில் ஜாம்நகருக்குச் சென்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக இருந்ததால், அங்கு திருடும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, ஜாம்நகர் பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த லேப்டாப்பை திருடியுள்ளனர். பின்னர், அங்கிருந்து ராஜ்கோட் சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மெர்சிடிஸ் கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த ரூ.10 லட்சம் பணம் மற்றும் லேப்டாப்பை திருடிவிட்டு, பின்பு டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை கூட்டத்திற்கு தலைவனாக விளங்கியது மதுசூதன் என்பதும், அவர்தான் எங்கு திருட வேண்டும் என்பதை முடிவு செய்வார் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் ,இந்த கும்பல் முக்கிய நகரங்களுக்கு ரயிலில் சென்று, மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் கண்ணாடியை உடைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடத்தியதில், கடந்த நான்கு மாதத்தில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத், டெல்லி என 11 இடங்களில் திருடி இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த கும்பல் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவிலும் இதேபோன்று திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள மதுசூதன் என்பவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.