மதுரை: மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, புலிப்பட்டி, வல்லாளபட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேதந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிட் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஏலத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து, மத்திய அரசு டங்ஸ்டன் தற்காலிகமாக ஏல அறிவிப்பை ஒத்திவைத்தது. தொடர்ந்து, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் கனிம சுரங்கம் அமைக்க மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் மத்திய அரசுக்கு தமிழகத் தொல்லியல் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
![கழிஞ்சமலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-12-2024/tn-mdu-02-tungsten-archaeologists-condemned-script-7208110_27122024143734_2712f_1735290454_116.jpg)
இது குறித்து தொல்லியல் அறிஞர்கள் எ.சுப்ராயலு, கோவை - ர.பூங்குன்றன், வேலூர் - நா. மார்க்சிய காந்தி, சென்னை - ஆ.பத்மாவதி, சு.இராசகோபால், ச.செல்வராஜ், கி. ஸ்ரீதரன், தர்மபுரி - வெ.வேதாசலம், மதுரை - மா.சந்திரமூர்த்தி, காஞ்சிபுரம் மற்றும் இதர தமிழ்நாட்டு தொல்லியல் அறிஞர்கள் சார்பாக, தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் இன்று(டிசம்பர் 27) வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமணத் தலம்:
அதில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டி எனும் சிற்றூர், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டதாகும். இங்குள்ள கழிஞ்சமலை என்னும் மலையில் சுமார் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு தமிழி (Tamil Brahmi) கல்வெட்டுகள் உள்ளன. இவை ஒரு தொன்மையான சமணத் தலமாகும்.
![கழிஞ்சமலையில் உள்ள சிற்பங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-12-2024/tn-mdu-02-tungsten-archaeologists-condemned-script-7208110_27122024143734_2712f_1735290454_226.jpg)
இதையும் படிங்க:டங்ஸ்டன் விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விவசாயிகள் - ஜனவரி 7-ல் போராட்டம் அறிவிப்பு!
கிபி 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு குடைவரை (சிவன்) கோயில், மிக அரிய லகுலீசர் சிற்பம் ஒன்றும் இங்குள்ளது. தமிழி கல்வெட்டுகள் காணப்படும் இடத்தின் அருகிலேயே சுமார் 10 அடி தூரத்தில் மலையில் சமணத்தீர்த்தங்கரர் சிற்பம் வெட்டப்பட்டு அதன் கீழ் அதனை வெட்டுவித்தவர் பெயரும், ஊரின் பழமையான பெயரும் காணப்படுகிறது. இக்கல்வெட்டு பழமையான வட்டெழுத்தில் உள்ளது.
![குடைவரை சிவன் கோயில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-12-2024/tn-mdu-02-tungsten-archaeologists-condemned-script-7208110_27122024143734_2712f_1735290454_495.jpg)
'திருப்பிணையன் மலை பொற்கோட்டுக் காரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்தத் திருமேனி பாதிரிக் குடியார் ரட்சை' என்பது அந்தக் கல்வெட்டின் வாசகம். இக்கல்வெட்டின் படி இவ்வூரின் பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாதிரிக்குடி என அழைக்கப்பட்டது. இம்மலையின் பெயர் திருப்பிணையன் மலை என்றும், இச்சிலையைச் செய்தவர் அச்சணந்தி என்ற சமண துறவி என்பதும் அறியப்படுகிறது.
ராணுவ நடவடிக்கை:
இத்துடன் இவ்வூரில் கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் ஒன்றும் இருந்து அழிந்துள்ளது. இங்குள்ள கட்டுமான கற்களில் கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு மூலம் இவ்வூர் அக்காலத்தில் ஐநூற்றுப் பெருந்தெரு என்ற பெயரில் ஒரு வணிகத் தலமாக இருந்தது வெளிப்படுகிறது. இதன் பின்னர், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமலை நாயக்கர் காலத்து செப்பேடும் இருந்துள்ளது. இதில் இவ்வூரின் காவல் முக்கியத்துவம் ராணுவ நடவடிக்கை போன்ற செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
![குடைவரை சிவன் கோயில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-12-2024/tn-mdu-02-tungsten-archaeologists-condemned-script-7208110_27122024143734_2712f_1735290454_46.jpg)
இத்தகைய சிறப்பு வாய்ந்த அரிட்டாபட்டிக்கு சுமார் 5 கி.மீ. தொலைவிலேயே மாங்குளம் என்னும் ஊரின் மலைக்குகையில் ஆறு தமிழி கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளது 1882ஆம் ஆண்டிலேயே ராபர்ட் சீவல் என்னும் ஆங்கிலேயே அறிஞரால் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்ட நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மத்திய அரசின் ஏல அறிவிப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
சங்க இலக்கியங்களில் பேசப்படும் மன்னர் இவர் ஆவார். மேலும் இக்கல்வெட்டுகளில் 'நந்தஸ்ரீ குவன்' என்னும் சமண துறவி பெயரும் 'வெள்ளறை நிகமம்' என்னும் வணிக நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இம்மலையின் சுற்று வளாகத்தில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் நிலவுகிறது.
டங்ஸ்டன் சுரங்கம் முயற்சி:
இத்தகைய வரலாற்று முக்கியத்துவமும், பாரம்பரிய பெருமையும் நிறைந்த அரிட்டாபட்டி என்னும் இவ்வூரில் மத்திய அரசு டங்ஸ்டன் இழை சுரங்கம் அமைக்கும் முயற்சியை தொல்லியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
![கழிஞ்சமலை கோயில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-12-2024/tn-mdu-02-tungsten-archaeologists-condemned-script-7208110_27122024143734_2712f_1735290454_285.jpg)
ஒருபுறம் வரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பதற்குப் பல கோடிகளை செலவழிக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் வளர்ச்சி என்ற முனைப்பில் இத்தகைய வரலாற்றுச் சின்னங்களுக்கு ஊறு நேரும் வகையிலும், என்றென்றைக்கும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய வரலாற்று ஆதாரங்கள் அழிந்துபடும் வகையிலும் செயல்படுத்தப்படும் முயற்சியை தொல்லியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் கண்டிக்கிறோம்.
எனவே, முக்கியத்துவம் வாய்ந்த அரிட்டாபட்டி பகுதியில் அதன் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் இழை சுரங்கத்தை அனுமதிக்க கூடாது” என அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.