கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே தனியாக சென்ற பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் சென்று, தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்ட செட்டிப்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலரிடமிருந்து 7.5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (58). இவர் கடந்த ஜனவரி 27ஆம் தேதி, ஜோதிநகர் வழியே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரிடமிருந்து நான்கு பவுன் செயினை பறித்துச் சென்றுள்ளார்.
இதே போன்று, கோலார்பட்டி சுங்கத்தைச் சேர்ந்த அம்சவேணி (32), உடுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரிடமிருந்து இரண்டு பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். விசாரணையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்ததில், இரு பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது ஒரே நபர் என தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: "குடியரசு தினத்தில் மாவட்ட ஆட்சியர் விருதுகளுக்கு அரசாணை இல்லை" ஆர்டிஐ மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
இதையடுத்து பொள்ளாச்சி நகரம், உடுமலை சாலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 150 கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில், நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது, மாக்கினாம்பட்டி பகுதியில் வசித்து வரும் தலைமைக் காவலர் சபரிகிரி (41) என்பது தெரிய வந்துள்ளது.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றியுள்ளார். பின்னர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனையடுத்து, செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவரை, சிறப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
தனியாகச் சென்ற பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்ட செட்டிப்பாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர் சபரிகிரி மீது, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்து 7.5 பவுன் நகையை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர். பெண்களிடம் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிவசேனா பிரமுகர் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு; மகாராஷ்டிராவில் பரபரப்பு