திருநெல்வேலி: சொத்து பிரச்னை தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த மே 13ஆம் தேதி தற்கொலைக்கு முயன்ற நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (மே.16) உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருத குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர சுப்பு (32) கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது பூர்விக சொத்தில் இருந்து, தனக்கான பங்கை பங்காளிகள் பிரித்து தரவில்லை எனக் கூறி மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததாக, மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துச் சென்றுள்ளார்.
ஆனால் அதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனம் உடைந்த சங்கர சுப்பு, கடந்த மே 13ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற உதவி ஆய்வாளர் அப்துல் ஹமீது உள்ளிட்ட போலீசார் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீக்காயப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கரசுப்பு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 2017ஆம் ஆண்டு இதே நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில், இசக்கிமுத்து என்பவர் கந்து வட்டி கொடுமையால் மனைவி, குழந்தைகள் உள்பட நான்கு பேர் குடும்பத்தோடு தற்கொலை செய்து உயிரிழந்தனர். இதையடுத்து, நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவுவாசலில் தற்கொலைச் சம்பவங்களைத் தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும், தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை உடனடியாக காப்பாற்ற, வாசல் அருகே பிரத்யேகமாக குடிநீர் டேங்க் ஒன்றும் வைக்கப்பட்டது. இருந்தும் தொடர்ச்சியாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பலர் தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தற்கொலைக்கு முயன்ற சங்கரசுப்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.