சென்னை: நடப்பாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இம்மாதம் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது துறை சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) சிறு, குறு நடுத்தர தொழில்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மதுவிலக்கு, காவல் துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது.
அப்போது,குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,
- குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெறுவதினை (ரூ.20 இலட்சம் வரை) எளிதாக்கும் வகையில் தாய்கோ வங்கி அளிக்கும் கடனுக்கு தற்போது ஆண்டுக்கு 10 விழுக்காடு வட்டி விகிதம் என்ற அளவில் இருந்து 7 விழுக்காடு என்ற வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் வகையில் கலைஞர் கடனுதவி திட்டம் ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் தாய்கோ வங்கி மூலம் செயல்படுத்தப்படும்.
- நீடித்த நிலையான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முன்னேற்றம் அடையும் நேர்வு தொழிலாக (Thrust Sector) வகைப்படுத்தப்பட்டு சிறப்பு முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
- படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தற்பொழுது வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குடும்ப ஆண்டு வருமானத்தின் உச்ச வரம்பு ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.8 இலட்சமாக உயர்த்தப்படும். மேலும், தொழில் தொடங்கவுள்ள மாவட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படும். இதன் மூலம் அதிகப்படியான வேலையில்லா படித்த இளைஞர்கள் பயன்பெற இயலும்.
- குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்புகள் நடத்தப்படும்.
- உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2024-இல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயலாக்குவதற்கு உயர்நிலை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.
- மாற்றுத்திறன் படைத்தவர்களை பணியில் அமர்த்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஊதியப்பட்டியல் மானியம் வழங்கப்படும்.
- குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தங்களது சர்வதேச தரச்சான்றிதழ்களை புதுப்பிக்க மானியம் வழங்கப்படும்.
- சென்னை தொழிற் கூட்டுறவு பகுப்பாய்வு கூடம் லிட் MICAL)-க்கு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கி நவீனப்படுத்தவும், NABL அங்கீகாரம் பெறவும் ரூ.43 இலட்சம் செலவிடப்படும்.
- மதுரையில் உள்ள மண்டல பரிசோதனை ஆய்வகம் NABL-க்கு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கி நவீனப்படுத்தவும், NABL அங்கீகாரம் பெறவும் ரூ.1.97 கோடி செலவிடப்படும்.
- காக்களூரில் உள்ள மத்திய மின் பொருள் சோதனைக் கூடத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கி நவீனப்படுத்தி தானியங்கி மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
- MSME நிறுவனங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக்குகள் மற்றும் ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்பினை மேம்படுத்த தொடர் பரிமாற்றத் திட்டம் உருவாக்கப்படும்.
- புதுக்கோட்டை மாவட்டம் வல்லவாரி ஆதி-திராவிடர் கயிறு தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கத்திற்கு, சேமிப்பு கிடங்கு அமைக்கவும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தான்கோட்டை கயிறு தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கத்திற்கு தானியங்கி கயிறு திரிக்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்து வழங்கவும் மொத்தம் ரூ.25.09 இலட்சம் செலவிடப்படும்.
- காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம், திருமுடிவாக்கத்தில் 2.47 ஏக்கரில் சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.2.50 கோடி திட்டமதிப்பீட்டில் புதிய குறுந்தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.
- புத்தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான "தொழில் நயம்" என்ற நவீன வடிவமைப்பு உதவி மையம் StartupTN சென்னை மெட்ரோ மையத்தில் நிறுவப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்க்கான புத்தொழில் நிதி.
- தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவின் இரண்டாம் பதிப்பு இந்த நிதி ஆண்டில் மதுரையில் நடத்தப்படும்.
- 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு “பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP)” ரூ. 4.11 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும் உள்ளிட்ட 35 அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையும் படிங்க: சட்டப் பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்!