திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 10.00 மணிக்கு மேல் தலா 75 கிலோ என 150 கிலோ எடையில் கொழுக்கட்டைகள் கொண்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு கோயிலின் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது. மேலும் 2004ஆம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.
மேலும் இந்த பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.இந்நிலையில் இன்று தொடங்கி 14 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். அதேபோல் மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.
இந்த பெரிய கொழுக்கட்டையை தோளில் சுமந்து, பின் அதை படையிலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விழாவிற்காக மலேசியாவில் இருந்து வருகை தந்த தயாளன்- ஜெயமாதவி தம்பதியினர் கூறுகையில், “இந்த உச்சி பிள்ளையார் கோயில் உலகறிய சிறப்பு வாய்ந்தாக உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள மிக ஆர்வத்துடன் வருகை தந்திருந்தோம். விழாக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பாக இருந்தன. இந்த விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாதுஷா விநாயகர்! காமாட்சி விளக்கு விநாயகர்! பல்வேறு தோற்றத்தில் சென்னையை கலக்கும் யானைமுகன்!