திருச்சி: திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி பொன்மலை 'ஜி' கார்னர் பகுதியில் மேம்பாலமோ, சுரங்க பாதையோ இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகக் கூறி திருச்சி எம்.பி துரை வைகோ, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் திட்ட இயக்குநர் பிரவீன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று அந்த பகுதியை நேரில் ஆய்வு செய்தனர்.
அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருச்சி எம்பி துரை வைகோ, “பொன்மலை ஜி கார்னர் சாலை பிரச்சினை குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசினேன். அப்போது நிலம் வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தது.
நிதியில் ஏதும் பிரச்சினை வராது என்று நினைக்கிறேன். விரைவில் பொன்மலை 'ஜி' கார்னர் பகுதியில் மேம்பாலமோ அல்லது சுரங்கப் பாலமோ அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக, இரண்டு துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அவர்களது துறை அமைச்சருக்கும் ஒரு ஏவலாளனாய் நான் பணிபுரிய தயாராக இருக்கிறேன்” என்றார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டுள்ளன. என்னை பொறுத்தவரை உரிய விசாரணை இல்லாமல், ஆதாரம் இல்லாமல் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
ஒருவேளை அவர்கள் தவறான நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படும். உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெறுவதால், நீதிமன்றம் வழங்குவதே இறுதித் தீர்ப்பு. நீதிமன்றத்திற்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், நிச்சயமாக நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றும்” என்றார்.
இதையும் படிங்க: பத்ம பூஷன் விருது: "மனைவியும், தோழியுமான ஷாலினிக்கு நன்றி" - நடிகர் அஜித்!
தொடர்ந்து, வேங்கைவயலுக்கு தவெக தலைவர் விஜய் வருவதாக இருந்ததால், வழக்கு அவசர கதியில் முடிக்கப்பட்டதா?" என்ற கேள்விக்கு, "ஜோக்கை ஜோக்காக வைத்து கொள்ளுங்கள். சீரியஸ் பிரச்சினைகளை சீரியசாக வைத்துக் கொள்ளுங்கள். வேங்கைவயலுக்கு விஜய் வருவதாக இருந்ததால்தான் இவ்வழக்கு வேக வேகமாக முடிக்கப்பட்டது என கூறுவது முழுக்க முழுக்க தவறு. உரிய வீடியோ ஆடியோ ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில் தான் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்” என்றார்.
இதையடுத்து, சீமான் குறித்து விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் அளித்துள்ள பேட்டி குறித்து கேட்டதற்கு, “அண்ணன் சீமான் விஷயத்திற்குள் நான் போக விரும்பவில்லை. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.