மதுரை: காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றிய மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டில் பணியில் இருந்த போது இறந்தார். அவரது உடல் விமானம் மூலம் மதுரை வந்தது. மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அப்போதைய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்துவதற்காக விமான நிலையம் வந்து மரியாதை செலுத்தி விட்டு திரும்பும்போது பாஜகவினர் சிலர் அமைச்சர் கார் மீது செருப்பு வீசினர்.
இந்த சம்பவம் குறித்து 10க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பாஜகவைச் சேர்ந்த வேங்கைமாறன், மணிகண்டன், தனலட்சுமி, மாணிக்கம் உள்ளிட்ட 12 பேர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வழக்கை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்தார். அப்பொழுது நீதிபதி, ஒரு அமைச்சர் தேசியக்கொடியை காரில் பொருத்தி பயணிக்கும் போது அவரது வாகனம் மீது செருப்பு வீச்சு சம்பவம் என்பது தேசியக்கொடியை அவமதிக்கும் செயலாகும்.
அது மட்டுமல்லாமல், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அமைச்சரை திட்டி கோஷம் எழுப்பி உள்ளீர்கள். அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு உள்ள சூழலில் இந்த வழக்கை எவ்வாறு ரத்து செய்ய முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் முறையாகச் சந்திப்பதே சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு ரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.