சென்னை: நடிகை நயன்தாரா தனது திருமண ஆவணப்படத்தில், நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த "நானும் ரவுடிதான்" படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இதையடுத்து, நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் வொண்டர் பார் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இறுதி விசாரணைக்காக ஜன.22ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்திருந்தார்.
இதையும் படிங்க: ஜகபர் அலி படுகொலை: வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்; குவாரி அளவிடும் பணிகள் நிறைவு!
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (ஜன.22) விசாரணைக்கு வந்தது. அப்போது, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆவணப்படத்தில் "நானும் ரவுடிதான்" திரைப்படத்தில் இடம் பெறாத காட்சிகளுக்கு வொண்டர் பார் நிறுவனம் உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்த மனு மீதான வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.