சென்னை: பள்ளிக் கட்டடம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தில், அந்த நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்குப் பதிலாக வீட்டு மனைகளாக மாற்றும் வகையில் நிலத்தை வகைமாற்றம் செய்து தரக் கோரி, மாவட்ட நகரமைப்பு திட்டத்துறை உதவி இயக்குனரிடம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சார்லஸ் ஜெயக்குமார் என்பவர் விண்ணப்பித்துள்ளார்.
அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், வீட்டு மனையாக மாற்றி பட்டா வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட நகரமைப்பு திட்டத்துறை உதவி இயக்குனர் மற்றும் தாசில்தார் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட நகரமைப்பு திட்டத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர் மனுதாரர்கள் அனைவரின் சார்பாக தாசில்தார் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் E.V.சந்துரு ஆஜராகி, மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்யாமல் வட்டாட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவை நிராகரிக்க வேண்டுமெனவும், ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் வாதிட்டார். இதனையடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேவையின்றி பதில் மனுத் தாக்கல் செய்ததாக கூறிய தாசில்தாருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த தொகையை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கை மாற்ற கோரிய வழக்கு; தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு!