சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததை அடுத்து, திமுகவினர் பல இடங்களில் ஆட்டுக்கு அவரது போட்டோவை அணிவித்து நடுரோட்டில் ஆட்டின் தலையை வெட்டி ரத்தத்தை ரோட்டில் தெளித்துக் கொண்டாடினர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ் மணி, “இது போன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம் மட்டுல்ல, விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி குற்றமாகும்.
இச்சம்பவங்கள் வருங்காலத்தில் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும். அரசியல் கட்சித் தலைவர்கள் போட்டோவை அணிவித்து மக்கள் மத்தியில் விலங்குகளை துன்புறுத்தி வெட்டுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, “இது போன்ற விஷயங்களை ஏற்க முடியாது” என தெரிவித்து காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: ''தேர்தல் முடிந்தவுடன் ஆடு பிரியாணி ஆவது உறுதி'' - அண்ணாமலையை சீண்டும் நடிகை விந்தியா!